ஜிஎஸ்டி வரியால் இந்திய மாநில அரசுகளின் நிதி பற்றாக்குறை பிரச்சனை நீங்காது என்று எஸ் & பி குளோபல் ரேட்டிங்ஸ் நிறுவனம், அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டது. இதனை அடுத்து, ஜிஎஸ்டி வரியால் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கான வரிக் கட்டமைப்புகளில் ஒரு மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இதனால் இந்தியாவில் வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, மாநிலங்களுக்கான வரி வருமானத்தையும் அதிகப்படுத்தலாம் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில், எஸ் & பி குளோபல் ரேட்டிங்ஸ் நிறுவனத்தின் கிரெடிட் அனலிஸ்ட் யீஃபார்ன் புஹா "இந்திய மாநிலங்களின் பொது நிதி அமைப்பு ஒரு பார்வை (Public Finance System Overview: Indian States)" என்கிற பெயரில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், இந்தியாவில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கிடையிலான சட்ட ரீதியிலான அமைப்புகள் ஒரு விதமாக வலுவடைந்து வருகிறது. குறிப்பாக மத்திய அரசுக்கு சாதகமாக அமைந்து வருகிறது. ஆனால் நிதிக் கட்டமைப்பு ரீதியில் பற்றாக்குறை பரவலாக எல்லா மாநிலங்களிலும் இருக்கிறது. மத்திய அரசுக்கும் நிதிப் பற்றாக்குறை இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில், ”மாநில அரசுகள் ஒரு பக்கம் தங்கள் மாநிலத்தை முன்னேற்ற தேவையான முதலீடுகளைச் செய்து வருகிறார்கள். மறு பக்கம் இலவச திட்டங்கள், பண உதவித் தொகை போன்றவற்றை வழங்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இது எல்லாமே மாநில அரசிக்கு மிக பெரிய நிதிப்பற்றாக்குறை ஏற்படுத்துகிறது” எனக் கூறியுள்ளார்.